ஜொகூர் பாரு, ஜூன் 25-
கடந்த மாதம், ஐ.எஸ் தீவிரவாத கும்பலை ஆதரித்து மற்றும் அவர்களுக்கு சொந்தமான உடைமைகளை வைத்திருந்ததாக கணவன் மனைவி உட்பட மூன்று நபர்கள் ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.
35 வயது முஹம்மது ஃபீசோல் ஹரோன், 46 வயது சுஹானி சர்வான் உட்பட 37 வயது முகமட் ஃபிர்தௌஸ் கமால் இன்ட்ஜாம் ஆகியோர் நீதிபதி டத்தோ சே வான் ஜைதி சே வான் இப்ராஹிம் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர்கள் தலை அசைத்தனர்.
இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவிருப்பதால் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் அம்மூவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 7 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் மற்றும் குற்றம் புரிய பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்ய வகை செய்யும் குற்றவியல் சட்டம் 130JB(1)(a) பிரிவின் கீழ் அந்நபர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த மே 27 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதிகளில் அம்மூவரும் வெவ்வேறு இடங்களில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மறு செவிமடுப்பு வரும் ஜூலை 30 ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.








