கோலாலம்பூர், டிசம்பர்.20-
கிள்ளான் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 1.53 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதன் வழி அனைத்துலக போதைப்பொருள் கும்பல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தின் போதைப் பொருள் துடைத்தொழிப்பு இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
இந்த சோதனை நடவடிக்கையில் அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள என்று நம்பப்படும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 க்கும் 39 க்கும் இடைப்பட்ட வயதுடைய அவர்களில் மூவர் உள்ளூர் ஆண்களும், 3 வெளிநாட்டுப் பெண்களும் அடங்குவர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் ஓமார் இதனைத் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி கிடைக்கப் பெற்ற உளவுத் தகவல் அடிப்படையில் கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. முதல் சோதனை, கோலாலம்பூர் செராஸில் நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து இரண்டாவது சோதனை செராஸ், Tayton- னிலும், மூன்றாவது சோதனை காஜாங், சுங்கை சுவா தொழிற்பேட்டையிலும், நான்காவது சோதனை Bandar Teknologi Kajang- கிலும் நடத்தப்பட்டதாக டத்தோ ஹுசேன் ஓமார் குறிப்பிட்டார்.








