ஷா ஆலாம், மார்ச்.08-
அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பெண்கள் குடும்பத்தின் பலமாகவும், சமுதாயத்தின் தூண்களாகவும், நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய இயங்கு சக்தியாகவும் விளங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது வாழ்வின் போராட்டப் பயணத்தில் தமக்கு உந்துசக்தியாகவும் துணையாகவும் விளங்கும் மனைவி டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், தனது மகள்கள் ஆகியோரின் தியாகங்களை அவர் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக அமைதியான முறையில் அன்றாடம் உழைக்கும் மில்லியன் கணக்கான தாய்மார்கள், ஆசிரியர்கள், பெண் தலைவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். பெண்கள் தொடர்ந்து மதிக்கப்படுவதையும், அவர்களுக்குச் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதிச் செய்து அவர்களை மேலும் வலுப்படுத்த வேண்டும் என அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.








