கோலாலம்பூர், சான் சோ லின் நிலையத்திற்கு அருகிலுள்ள முக்கிய பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைவதை அடுத்து, அம்பாங் தடத்திற்கான எல்.ஆர்.டி ரயில் சேவை நாளை புதன்கிழமை முதல் தற்காலிக செயல்பாட்டு முறைக்குத் திரும்பும் என்று ரேபிட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ஏற்பாட்டின்படி, புத்ரா ஹைட்ஸ் மற்றும் செந்துல் தீமோர் இடையேயான ரயில் சேவைகள் வழக்கம் போல் இடமாற்றங்கள் இன்றி இயங்கும். எனினும், அம்பாங் மற்றும் செந்துல் தீமோர் இடையே இரு திசைகளிலும் பயணிக்கும் பயணிகள் சான் சோ லின் நிலையத்தில் மட்டும் ஒருமுறை ரயில் மாற வேண்டும். இந்த மாற்றத்தால் உச்சகட்ட நேரங்களில் பயண நேரம் சுமார் 5 நிமிடங்கள் அதிகரிக்கும்.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக சான் சோ லின், மஸ்ஜித் ஜமேக், செந்துல், பண்டாராயா உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் சுமார் 10 இலவச பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். பயணிகள் நடமாட்டத்தை சீரமைக்க முக்கிய நிலையங்களில் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர் என்று ரேபில் ரயில் நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








