ஜோகூர் பாரு, பிப்ரவரி.27-
கடந்த ஆண்டு ஜுலை மாதம், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான யுடிஎம் பயிற்சி மாணவர் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடிடின் மரணத்திற்கு காரணமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று ராணுவப் பயிற்சி அதிகாரிகள், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
40 வயது Major Mohd Azmi Abu Bakar, 30 வயது Captain Muhammad Bahauddin Ab Rasid மற்றும் 41 வயது வாரண்ட் அதிகாரி Mohd Norbuangani Mislan ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட அந்த மூன்று இராணுவ அதிகாரிகள் ஆவர்.
கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள், கோத்தா திங்கியிலுள்ள உலு திராம் உத்தாரா துப்பாக்கிச் சுடும் தளத்தில், ஷாம்சுல் ஹாரிஸுக்கு மரணத்தை விளைவிக்கக்கூடிய காயங்களை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 30 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 304 ஆவது பிரிவின் கீழ் மூன்று அதிகாரிகளும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
மூவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதைத் தொடர்ந்து தலா 20 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இவ்வழக்கு விசாரணையின் போது, உயிரிழந்த ஷாம்சுல் ஹாரிஸின் தாயார் Ummu Haiman Bee Daulatgun மற்றும் அவர்களின் வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.








