கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோகூர், சிகமாட்டில் ஒரு டிரெய்லர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்த போக்குவரத்து அமைச்சரும், ஜசெக பொதுச் செயலாளருமான அந்தோணி லோக், அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன் நிதியுதவியையும் வழங்கினார்.
இந்த கோர விபத்தில் 71 வயது கே. மாயகிருஷ்ணன், அவரது மனைவி 65 வயது எஸ். சிவந்தை மற்றும் வேன் ஓட்டுநரான சிவந்தையின் அண்ணன் 75 வயது மாயகிருஷ்ணன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுடன் வேனில் பயணித்த மாயகிருஷ்ணனின் பேரப்பிள்ளைகளான 22 வயது பி. ஹரிஹரன் மற்றும் 18 வயது பி. சுகுயா ஆகியோர் படுகாயமடைந்து, தற்போது சிகமாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரைச் சந்தித்துத் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து சிகிச்சைக்கான உதவித் தொகையை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அந்தோணி லோக்,
"இந்த விபத்து லாரி ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியதால் ஏற்பட்டுள்ளது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.
பெரும்பாலான ஓட்டுநர்கள் ஒழுக்கத்துடன் செயல்பட்டாலும், ஒரு சிலரின் இத்தகைய பொறுப்பற்ற செயலால் அப்பாவி உயிர்கள் பறிபோகின்றன. மது அல்லது போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டுவது மற்றவர்களின் வாழ்வைச் சிதைத்துவிடும்," என எச்சரித்தார்.
மேலும், இந்த விபத்துக்குக் காரணமான ஓட்டுநர் மீது போலீஸ் துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தோணி லோக் வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட டிரெய்லர் லாரி நிறுவனத்தின் மீது தணிக்கை மற்றும் விசாரணையை மேற்கொள்ள JPJ மற்றும் APAD நிறுவனங்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஓட்டுநர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்யத் தவறியதற்காக அந்த நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அந்தோணி லோக் சந்தித்த போது, நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருண்குமார், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மற்றும் ஜசெக பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.








