ஜோகூர் மாநிலம் குளுவாங்கில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி, தான் பெற்றெடுத்த பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 19 வயது மாணவியான நூர்ஷஸ்வென் இட்ரிஸ், குளுவாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிபதி நூராசிடா ஏ ரஹ்மான் முன்னிலையில் வாசிக்கப்பட்ட இவ்வழக்கு கொலை வழக்கு என்பதால், அவரிடம் குற்ற ஒப்புதல் பதிவு செய்யப்படவில்லை.
இச்சம்பவமானது தாமான் செத்தியா முத்தியாரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், குற்றவியல் சட்டம், பிரிவு 302-ன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளது.
இரசாயனப் பரிசோதனை, உளவியல் மதிப்பீடு மற்றும் உடற்கூறு ஆய்வு அறிக்கைகள் கிடைக்க வேண்டியுள்ளதால், வழக்கின் அடுத்த விசாரணை வரும் அக்டோபர் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.








