நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்ட் டிக்சன் அருகிலுள்ள தாமான் லிங்கி பகுதியில் ஏற்பட்ட மோதலில் 3 வங்காளதேசத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
இது குறித்து மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹமட் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று திங்கள்கிழமை மாலை 4.15 மணியளவில், வீடு ஒன்றில் வங்காளதேச நாட்டவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது, கொலைச் சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய வங்காள தேச ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், காயமடைந்த மற்றொரு வங்காளதேச தொழிலாளர் சிகிச்சைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்களும் சந்தேகநபரும் ஒரே தோட்டத்தில் பணியாற்றி, ஒரே வீட்டில் தங்கி வந்தது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








