கோலாலம்பூர், பிப்ரவரி.18-
ஜப்பானின் Toyama பகுதியில் கைது செய்யப்பட்டுள்ள மலேசியரான Faiq Zafran Jailani- க்கு பிரதிநிதித்துவம் வழங்க அவரது குடும்பத்தினர் வழக்கறிஞரை நியமித்துள்ளனர்.
வருகின்ற மார்ச் 12-ஆம் தேதி அவர் மூன்றாவது குற்றச்சாட்டினை எதிர்கொள்ள உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசிய மனிதநேய அமைப்பின் பொதுச் செயலாளர் ஹிஷாமுடின் ஹாஷிம் தெரிவித்தார். எனினும், ஜப்பானிய சட்ட நடைமுறைகளின்படி வழக்கு விவரங்கள் வழக்கறிஞரிடம் மட்டுமே பகிரப்படும் என்பதால், புதிய குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்களை வெளியிட முடியாது என்று அவர் கூறினார்.
"Faiq Zafran தற்போது ஒரு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இல்லை, ஆனால் அங்கு ஹலால் உணவு கிடைப்பது சவாலாக இருக்கலாம். அவர் காய்கறிகள் மற்றும் சோற்றை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. அவருடன் ஒரே அறையில் உள்ள மற்றொரு கைதிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், தகவல் தொடர்பிலும் சிரமம் உள்ளது," என்று ஹிஷாமுடின் தெரிவித்தார்.
24 வயதான பாலிடெக்னிக் பட்டதாரியான Faiq Zafran, ஜப்பானில் உள்ள மனிதக் கடத்தல் கும்பலால் ஏமாற்றப்பட்டுப் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.








