சரவாக்கில் ஹோட்டல் வாங்கிய விவகாரத்தில், 3 மில்லியன் ரிங்கிட் லஞ்ச ஊழல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் ஈசா சமாட் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை கூட்டரசு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மலாயா தலைமை நீதிபதி ஹாஷிம் ஹம்ஸா தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். கடந்த பிப்ரவரி 5 மற்றும் 10 ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் நடந்த வாதங்களின் நீதிமன்றப் பதிவு மற்றும் டிரான்ஸ்கிரிப்ட் பிரதிகளை இருதரப்பிற்கும் வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தண்டனைக் குறைப்பு குறித்த வாதங்களை முன்வைக்க தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற தற்காப்புத் தரப்பின் வாதத்தை நிரூபிக்க இந்த நீதிமன்றப் பதிவுகள் உதவும் என ஈசா சமாட்டின் வழக்கறிஞர் எம். ஆதிமூலம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் அடுத்தகட்ட நிர்வாக மேலாண்மை விசாரணை நாளை மே 14 ஆம் தேதி இணைய வழியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








