மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்ற தமது நிலைப்பாடு தனிப்பட்ட முடிவு அல்ல என்றும், அம்னோ இளைஞர் அணியின் நிலைப்பாட்டையே அது பிரதிபலிப்பதாகவும் டாக்டர் அக்மால் சாலே தெரிவித்துள்ளார்.
பதவிக்காகத் தமது கொள்கைகளை விட்டுக்கொடுக்கத் தாம் தயாராக இல்லை எனக் கூறிய அவர், மலாக்காவில் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து போட்டியிட்டால், தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தாம் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மட்டுமல்லாமல், அம்னோ இளைஞர் அணித் தலைவராகவும் பக்காத்தான் ஹராப்பானுடன் இணைவதைத் தமது அணி விரும்பவில்லை என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, தேசிய முன்னணி தலைவர் டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணிக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், இறுதி முடிவை மலாக்கா தேசிய முன்னணி தலைவரும், முதலமைச்சருமான அப்துல் ரவூப் யூசோப் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று ஜாஹிட் கூறியுள்ளார்.








