கோலாலம்பூர், பிப்ரவரி.24-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தியுள்ள புதிய வரி விதிப்பு முறையினால் மலேசிய நிறுவனங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது, பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் எழுப்பிய கூடுதல் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர், அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு கொள்கையானது அந்நாட்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க, அமெரிக்காவிலேயே முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது என விளக்கினார்.
நமது ஆய்வின்படி, அமெரிக்காவில் வர்த்தகம் அல்லது முதலீடு செய்யும் மலேசிய நிறுவனங்கள் மீது கிட்டத்தட்ட எந்த வரி விதிப்பும் விதிக்கப்படவில்லை. மாறாக, நமது நாட்டில் இயங்கி வரும் மற்றும் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த வரிகள் பொருந்தும். எனவே, இதனால் மலேசிய நிறுவனங்களுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்ச நிலை மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியாவிற்கு வருகை தந்த போது, இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், டிரம்பின் தற்போதைய வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்த மாற்றங்களை மலேசிய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அதற்கேற்ப அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.








