கோலாலம்பூர், பிப்ரவரி.01-
சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இனம், மதம், தூண்டுதல் தொடர்பான கருத்துகளை அரச மலேசியக் காவற்படை தீவிரமாக ஆராய்ந்து வருவதோடு, சட்டப்படி படிப்படியான நடவடிக்கைகளை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது. சமூக ஊடகங்களின் வெளிப்படைத்தன்மையால் மக்கள் எல்லை மீறிய கருத்துகளைப் பதிவிடுவதால், இத்தகைய விவகாரங்களைக் கண்காணிப்பது தொடர்ச்சியான ஒரு சவாலாக இருப்பதாகத் தேசியக் காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட சில நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்து, சிறந்த சட்ட அணுகுமுறையைத் தீர்மானிப்பதற்காகப் சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்துடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சட்ட வரம்புகளை மீறி கருத்துகளைப் பதிவிடுபவர்களுக்கு எதிராக முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








