பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 03-
அரசாங்க இலாகாக்கள் அனைத்திலும் இஸ்லாமிய சமய அதிகாரிகளை பணிக்கு அமர்த்தும் திட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ள இந்து, கிறிஸ்துவ, பெளத்த, சீக்கிய மற்றும் தாவோயிஸ்ம் சமயத்தவர்களை பிரதிநிதிக்கும் மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்றத்தை பாஸ் கட்சி, இன்று கடுமையாக சாடியுள்ளது.
மலேசியாவில் சர்வ சமய ஆலோசனை மன்றத்தினர், இஸ்லாத்திற்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டக்கூடியவர்கள் / இஸ்லாத்திற்கு சவால் விடுகின்றவர்கள் என்பதை அவர்களின் போக்கு தெளிவாக காட்டுகிறது என்று பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் தகியுதீன் ஹாசன் தெரிவித்துள்ளார். .
அரசாங்க இலாகாக்கள் அனைத்திலும் இஸ்லாமிய சமய அதிகாரிகளை பணிக்கு அமர்த்தும் திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் மலேசிய சர்வ சமய மன்றத்தின் நிலைப்பாடு, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகியுதீன் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள், தங்கள் மதத்தை சுதந்திரமாக, நல்லுறவு பாராட்டி, சமூகத்தில் நல்லிணக்கத்துடன் கடைப்பிடிக்கும் உரிமைக்கு மலேசிய சர்வ சமய மன்றம் சவால்விடும் தோரணையில் அதன் நிலைப்பாடு உள்ளது.
அதுமட்டுமின்றி நாட்டின் கூட்டரசு மதமாக விளங்கும் இஸ்லாத்தின் நிலைப்பாடு குறித்து சர்வ சமய மன்றம் கேள்வி எழுப்புகிறது என்று தகியுதீன் ஹாசன் குறிப்பிட்டார்.
சர்வ சமய மன்றம், சட்டத்தின் தவறான விளக்கத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது. முஸ்லீம்களின் நிலைப்பாட்டுடன் தொடர்பில்லாத நடைமுறைகளைத் தீர்மானிப்பதற்கு ஒரு நீதிபதியாகவும், ஒரு வழக்கறிஞராகவும் செயல்பட விரும்புகிறது என்று தகியுதீன் ஹாசன் தெரிவித்துள்ளார்.
சர்வ சமய மன்றத்தின் இந்த நிலைப்பாடு, மலேசியர்களிடையே வேண்டுமென்ற ஒற்றுமையின்மையையும், விரோதப்போக்கையும் உருவாக்க முயற்சிக்கிறது.
சர்வ சமய மன்றத்தின் இந்தப் போக்கு குறித்து பாஸ் கட்சி உண்மையிலேயே வருத்தமும் ஏமாற்றமும் கொள்வதாக தகியுதீன் ஹாசன் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








