மலாக்கா, ஏப்ரல்.29-
மலாக்கா மாநிலத்தின் சுற்றுலாப் போட்டித்தன்மையை அதிகரிக்க, அங்கு ஒரு பிரத்யேக சுற்றுலா விமான நிலையம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில ஆளுநர் துன் முகமது அலி ருஸ்தாம், சுற்றுலாப் பயணிகள் பிற மாநிலங்களில் தரையிறங்கி சாலை வழியாக மலாக்காவிற்கு வருவதைத் தவிர்க்க, நேரடி விமானப் போக்குவரத்து மிக முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ஏர்பஸ் (Airbus) மற்றும் போயிங் 737 ரக விமானங்கள் முழு கொள்ளளவுடன் தரையிறங்கும் வகையில், மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தின் ஓடுதளத்தை நீட்டிக்க வேண்டியது பொருளாதார ரீதியாக அவசியம். பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் அனைத்துலக சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்க முடியும் என்றும், இதன் மூலம் மாநிலத்தின் வருவாய் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.








