மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்து ஐந்து மாதங்களாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லாதது குறித்து ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் தமது அதிருப்தியை இன்று வெளிப்படுத்தினார்.
மூன்று இந்திய இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சட்டத்துறை தலைவர் உடனடியாகப் பகிரங்க விளக்கமளிக்க வேண்டும் என்று இலக்கவியல் அமைச்சரான கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நிகழ்ந்த இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 29 வயது ஜி. லோகேஸ்வரன், 21 வயது எம். புஷ்பநாதன் மற்றும் 24 வயது டி. புவனேஸ்வரன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அந்த மூவரும் கொள்ளையர்கள் என்று போலீசார் வகைப்படுத்தியதை அவர்களின் குடும்பத்தினர் வன்மையாக மறுத்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் போலீசார் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என்று என்பதற்கு ஆடியோ பதிவுகள் போன்ற ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனப் பொதுமக்களும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கேள்வி எழுப்புவதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.








