பாரிட் புந்தார், மார்ச்.13-
போதைப்பொருள் உட்கொண்ட நிலையில், தாம் செலுத்திய கார், கணவன்,மனைவி பயணித்த காரை மோதித் தள்ளி, அவ்விருவருக்கும் மரணம் விளைவித்ததாக குத்தகையாளர் ஒருவர், பேரா, பாரிட் புந்தார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
ங் ஜூ ஹான் என்ற 20 வயதுடைய அந்த குத்தகையாளர், மாஜிஸ்திரேட் முகமட் ஷாபுஃல் அக்மால் முகமட் ராஸி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 5 ஆம் தேதி காலை 7.50 மணியளவில் பேரா, கெரியான் மாவட்டத்திற்கு உட்பட்ட கோல குராவில் 59 வயது பஹாருடின் அஹ்மாட் மற்றும் அவரின் 66 வயது மனைவி வான் சானி வான் இஸ்மாயில் ஆகியோருக்கு மரணம் விளைவித்ததாக அந்த குத்தகையாளர் மீது குற்றஞ்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 15 ஆண்டு சிறை மற்றும் ஒரு லட்சம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ் அந்த குத்தகையாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








