கோலாலம்பூர், ஜனவரி.27-
வரவிருக்கும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பயணிகள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவதை உறுதிச் செய்யும் நோக்கில், ‘நிலையான கட்டணங்கள்’ வழங்கும் சிறப்புத் திட்டத்தை Batik Air விமான நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

‘Fixed Fares for Your Reunion’ எனும் இந்த விசேஷ பிரச்சாரத்தின் மூலம், பண்டிகைக் காலங்களில் விமானக் கட்டணங்கள் திடீரென உயர்வதைத் தடுத்து, பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்ட விலையில் பயணச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் / சுபாங் - கூச்சிங்: ஒரு வழிப் பயணம் 318 ரிங்கிட் முதல்.
கோலாலம்பூர் / சுபாங் - கோத்தா கினபாலு: ஒரு வழிப் பயணம் 378 ரிங்கிட் முதல்.
இந்தச் சலுகைக்கான முன்பதிவு இன்று முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை திறந்திருக்கும். பயணிகள் பிப்ரவரி 13 முதல் 16 வரை இப்பயணங்களை மேற்கொள்ளலாம்.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு Batik Air விமான நிறுவனத்தின் இந்த நிலையான கட்டணத் திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று அதிகாரப்பூர்வமாகth தொடக்கி வைத்தார்.
பண்டிகைக் காலங்களில் விமானக் கட்டணங்கள் விண்ணைத் தொடும் நிலையைத் தவிர்த்து, சாதாரண மக்களும் தங்களின் குடும்பங்களுடன் இணைய மலிவு விலையில் பயணிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.
பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, ஜோகூர் பாருவிலிருந்து பினாங்கு மற்றும் சிபு ஆகிய நகரங்களுக்குக் கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த Batik Air விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ சந்திரன் ராமமூர்த்தி, "பண்டிகைக் கால பயண நெருக்கடிகளைக் குறைத்து, குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் ஒன்று கூடுவதை எளிதாக்குவதே எங்களின் நோக்கமாகும். நிலையான மற்றும் மலிவான கட்டணங்கள் மூலம் பயணிகளின் சுமையைக் குறைக்கிறோம், என்று தெரிவித்தார்.








