சிரம்பான்,ஜூலை 27-
மலேசிய குடிநுழைவுத்துறையினர் சிரம்பான் மற்றும் Seri Kembangan- ஆகிய பகுதிகளில் 7 இடங்களில் நடத்திய சோதனையில் அந்நிய நாட்டைச் சேர்ந்த 82 உபசரணைப்பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
GRO போர்வையில் ஒழுங்கீன நடவக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் அந்த அந்நிய நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டது மூலம் இரண்டு விபச்சார கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் Datuk Ruslin Jusoh தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமையும், வியாழக்கிழமையும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் மொத்தம் 117 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொது மக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து கடந்த இரண்டு வார காலமாக அப்பகுதியில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட குடிநுழைவுத்துறையினர், அடுத்த கட்டமாக இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டதாக Datuk Ruslin Jusoh தெரிவித்தார்.
குடிநுழைவுத்துறை அதிகாரிகளின் வரவை கண்டு அனைத்துப் பெண்களும் ரகசிய அறைகளில் பதுங்கியிருந்ததாகவும் அவர் விளக்கினார்.
சம்பந்தப்பட்ட வர்த்தகத் தளங்களை பராமரித்து வந்த 27 க்கும் 63 க்கும் இடைப்பட்ட வயதுடைய உள்ளூரை சேர்ந்த 10 நபர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








