கோலாலம்பூர், டிச.14-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான கேஎல்ஏஏ.வில் அந்நிய நாட்டவர்கள் , நாட்டிற்குள் மிக எளிதாக நுழைவதற்கும், வெளியேறுவதற்கு பொறுப்பற்ற குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் அமைக்கப்பட்ட செட்டிங் முறை, முற்றாக துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த செட்டிங் முறை இன்னமும் ரகசியமான முறையில் செயல்பட்டு வருவதாக முக்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது. செட்டிங் முறையை துடைத்தொழிப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பி.ஆர்எம். முழு வீச்சில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 50 க்கும் மேற்பட்ட குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சில அதிகாரிகளின் இல்லங்களில் சோதனையிடப்பட்டதில் பல லட்சம் ரிங்கிட் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் செட்டிங் முறை மீண்டும் தலைத்தூக்கியது என்றும், இம்முறை அவர்கள் கையாளுகின்ற நடைமுறை முற்றிலும் மாறுப்பட்டுள்ளதாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
முகப்பிடங்களில் அதிகாரிகள் கைப்பேசியை பயன்படுத்தக்கூடாது என்று உள்துறை அமைச்சு தடை விதித்துள்ளது. ஆனால், நாட்டிற்குள் நுழைகின்ற அந்நிய நாட்டவர்களின் கடப்பிதழின் ஆகக்கடைசி நான்கு எண்கள் மட்டும் முன்கூட்டியே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு, குறித்துக்கொள்ளும்படி நினைவுறுத்தப்படுவதாக புதிய செட்டிங் முறையில் தெரியவந்துள்ளது என்று ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.








