இன்று மாலையில் கோலாலம்பூர், பங்சார், அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி ரயில் நிலையத்தில் பெண் பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாகத் தண்டவாளத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கிளானா ஜெயா வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருந்த 39 வயது மதிக்கத்தக்க பெண்மணி, கால் தவறி தண்டவாளத்தில் விழுந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரை மீட்கும் பொருட்டு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாலை 6.38 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரால் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
கைகள் மற்றும் முகத்தில் காயமடைந்த அப்பெண்மணி, முதலுதவிக்குப் பிறகு கோலாலம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தால் யுனிவர்சிட்டி மற்றும் அப்துல்லா ஹுக்கும் நிலையங்களுக்கு இடையே தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள், தற்போது மீண்டும் சீராகியுள்ளன.
இந்தத் தாமதத்திற்காகப் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட ராபிட் ரயில் நிர்வாகம், இது குறித்து அதிகாரிகளுடன் இணைந்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.








