இலங்கை பிரஜைகளான 3 இளைஞர்கள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் கோலாலம்பூர், செந்தூல், கம்போங் கோயில் ஹிளிர், ஜாலான் பெர்ஹெந்தியான், கடை வீடுகள் வரிசையில் நான்காவது மாடியில் ஒரு வீட்டில் நிகழ்ந்தது.
பிரபல புத்தகக்கடை வீற்றிருக்கும் கடை வரிசையில் ஒரு வீட்டில் 20 வயதில் இரண்டு இளைஞர்களும் 30 வயதில் 1 நபரும் ரத்த வெள்ளத்தில் வீட்டின் ஸ்டோர் அறையின் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் இலங்கை பிரஜைகளான 40 வயது மதிக்கத்தக்க கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட மூன்று நபர்களில் 20 வயதுடைய இளைஞர், கைது செய்யப்பட்ட தம்பதியரின் மகன் ஆவார் என்று டத்தோ அலாவுடின் விளக்கினார்.
மூன்று நபர்களும் கை கால்கள் கட்டப்பட்டு, தலை மட்டும் மூச்சு விடமுடியாத அளவிற்கு பிளாஸ்டிக் பையினால் கட்டப்பட்டிருந்தது. அந்த தம்பதியரின் மகன் மட்டும் நிர்வாணக் கோலத்தில் கிடந்தார்.
நேற்று இரவு 11 மணியளவில் அந்த 4 மாடி கட்டிடத்தில் 5 அறைகளை கொண்ட வாடகை வீட்டில் பெரும் கூச்சளுடன் அடிதடி சண்டை நடப்பதாக கிடைக்கப்பட்ட அவசர அழைப்பை தொடர்ந்து ரோந்துப் போலீசார் அவ்விடத்திற்கு விரைந்தனர்.
அந்த வீட்டை சோதனையிட்ட போது வீட்டின் ஸ்டோர் அறையில் விறகு கட்டைகள் அடுக்கப்பட்டதைப்போல மூவரின் சடலங்களும் ஒருவர் மீது ஒருவர் கிடந்ததாக டத்தோ அலாவுடின் குறிப்பிட்டார்.
அந்த வீட்டில் கணவன் மனைவி இருந்த வேளையில் அந்த மூவரையும் வெட்டி கொலை செய்ததாக நம்பப்படும் இலங்கை நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் அங்கிருந்து தப்பித்துவிட்டதாக தெரிய வந்துள்ளது.
முன்னதாக அந்த தம்பதியருக்கும், தப்பித்துவிட்ட இரண்டு இலங்கை பிரஜைகளுக்கும் கடும் வாக்குவாதமும் சண்டையும் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அந்த வாடகை வீட்டில் கடந்த 6 மாத காலமாக அந்த தம்பதியரும், கொலைச் செய்யப்பட்ட அவர்களின் 20 வயது மகனும், மேலும் இரண்டு இலங்கை பிரஜைகள் தங்கிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த தம்பதியருக்கு நன்கு அறிமுகமான கிள்ளானை சேர்ந்த அந்த இரண்டு கொலையாளிகள், திட்டம்போட்டு கடந்த இரண்டு நாட்களாக அந்த வீட்டில் தங்கிருந்ததாக தெரியவந்தது.
அவ்விருவரும் அத்தம்பதியர் வீட்டில் தங்கியிருந்த வேளையில் இந்த மூன்று கொலைகளை செய்துவிட்டு தப்பித்துவிட்டதாக நம்பப்படுகிறது.
2 கொலையாளிகளின் விவரங்களையும் அந்த தம்பதியரிடம் இருந்து போலீசார் பெற்றுவிட்டனர். அவர்களை தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அலாவுடின் குறிப்பிட்டார்.
மூவர் கொலைச் செய்யப்பட்டதற்கான பின்னணி உடனடியாக தெரியவில்லை என்ற போதிலும் புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளதாக அலாவுடின் குறிப்பிட்டார்.
தவிர, அந்த 2 கொலையாளிகளையும் பிடிப்பதற்கான புகைபடங்களையும் போலீசார் வெளியிட்டுள்ளதாகா அலாவுடின் மேலும் கூறினார்.








