மலாக்கா, மே.02-
மலாக்கா மாநிலம் Tanjung Kling பகுதியில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் தங்கியிருந்த மாணவர் ஒருவரைப் பகடிவதை செய்ததாக நம்பப்படும் 4 மாணவர்களைப் போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 29 - ஆம் தேதி மாலை 7.11 மணியளவில், பாதிக்கப்பட்ட மாணவரின் தாயார் புகார் அளித்ததாக மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த புகாரில், Salahuddin Abdul Aziz Shah Al Haj Pantai Puteri அனாதை இல்லத்தில் தங்கியிருந்த தனது மகன், மூத்த மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவர் தாக்கப்பட்டதுடன், உதைக்கப்பட்டு, தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் தலை திணிக்கப்பட்டு, கழிவறைத் தரையில் இழுத்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைமையக குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 3.45 மணியளவில், 15 முதல் 16 வயதுடைய நான்கு மாணவர்களைக் கைது செய்தனர் என்று ஸுல்கைரி இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.








