புத்ராஜெயா, ஜூலை.12-
சுகாதார அமைச்சின் கீழ் ஐந்து முக்கிய சேவைத் துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கான ஷிப்டு பணி நேர முறையில் விலக்களிப்பு வழங்கப்பட்டு இருப்பதானது, சுகாதாரப் பணியாளர்களுக்குக் கிடைத்த ஓர் உயரிய அங்கீகாரமாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
ஷிப்டு முறையில் பணியாற்றி வரும் 82 ஆயிரத்து 637 சுகாதாரப் பணியாளர்களுக்கு இத்தகைய விலக்களிப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது மூலம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் ஐந்து முக்கியச் சேவைத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான வேலை நேரத்தை வாரத்திற்கு 42 மணி நேரமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு ஷிப்ட் வேலை நேர முறையில் இருந்து விலக்கு அளிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
தாதியர்கள், சமூக தாதியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவ அதிகாரிகள், உதவி மருத்துவ அதிகாரிகள், சுகாதார உதவியாளர்கள் உட்பட மொத்தம் 82,637 சுகாதாரப் பணியாளர்கள் இந்த விலக்களிப்பில் இடம் பெற்றுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கான பொதுச் சேவை சம்பள முறையின் கீழ் 45 மணி நேர வாராந்திர ஷிப்ட் பணியைச் செயல்படுத்துவது தொடர்பாக சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்து வந்த கவலையை அரசாங்கம் பரிவுடன் கவனித்து உரிய தீர்வை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.








