கோலாலம்பூர், மார்ச்.06-
போலீஸ் நிலையங்கள் மற்றும் அரசு சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 16 முதல் 21 வயதுடைய ஆறு இளைஞர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையில் இவர்கள் சிக்கியதாக போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர், கிள்ளான் பள்ளத்தாக்கு, ஜோகூர், கெடா மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அறுவரில் மூவர் 18 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக ஐஎஸ் தீவிரவாதக் கொள்கைகளைப் பரப்புதல், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.
தவிர போலீஸ் நிலையங்கள், அரசு வசதிகள் மற்றும் பொது இடங்களைத் தாக்குவதற்கு இவர்கள் ரகசியமாகத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஐஜிபி குறிப்பிட்டார்.
இவர்களிடமிருந்து 11 கைபேசிகள், 2 மடிக்கணினிகள், ஐஎஸ் அமைப்பின் 4 கொடிகள் மற்றும் தீவிரவாதக் கருத்துக்கள் கொண்ட 3 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காலிட் இஸ்மாயில் மேலும் கூறினார்.








