கோலாலம்பூர், பிப்ரவரி.01-
சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாக முன்னாள் ஊடகவியலாளர், சீன நாளிதழ் ஒன்றின் மீதான அவதூறு வழக்கு விசாரணைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதன் கோப்புகள் விரைவில் சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தேசியக் காவற்படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். பொதுக்கூட்டம் ஒன்றில் முறையற்ற கேள்விகளை எழுப்பிய விவகாரம் தொடர்பாக அந்த ஊடகவியலாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் வேளையில், அவர் தனது செயலுக்கு ஏற்கனவே பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இதனிடையே, மாமன்னரின் உரையைத் தவறாக மொழிபெயர்த்து வெளியிட்டதாகக் கூறப்படும் சீன நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியர் ஆகியோரிடமும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த பிரிவின் கீழ் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் இனம், மதம், மன்னராட்சி ஆகியவற்றை உட்படுத்திய 3R தொடர்பான உணர்ச்சிகரமான விவகாரங்களைக் கையாள, சட்டத்துறை அதிகாரிகளுடன் இணைந்து முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காலிட் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.








