கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் மரணத்தின் பின்னணியில் பகடிவதை, அலட்சியம், பாலியல் தொல்லை ஆகியவை நிகழ்ந்து இருப்பதை உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சபா, பாபாரைச் சேர்ந்த 13 வயதுடைய அந்த மாணவியின் மரணம் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை மேற்கொண்ட புலன் விசாரணையில் அவரின் மரணப் பின்னணியில் இந்த மூன்று அம்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பகடிவதை நடந்துள்ள இந்தச் சம்பவத்தை மறைக்கவோ, மூடுவதற்கோ முயற்சிகள் நடந்திருக்கக்கூடாது. எனவேதான் அந்த மாணவியின் மரணம் விரிவாக ஆராயப்பட்டு இருப்பதாக அவர் விளக்கினார்.
பள்ளிகள் மாணவர்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும். பகடிவதை நடந்து இருக்குமானால் அதனை மூடி மறைக்க முயற்சிக்க கூடாது என்று பள்ளி நிர்வாகங்களை சைஃபுடின் கேட்டுக் கொண்டார்.








