ஜோகூர் பாரு பாரஸ்ட் சிட்டியில் செயல்பட்டு வந்த நெட்வொர்க் ஸ்கூல் என்ற தொழில்நுட்பக் குழுமத்தில் இஸ்ரேல் நாட்டினரும் இடம்பெற்றுள்ளதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அதனை உடனடியாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது குறித்து ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹாபிஸ் காஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணை மற்றும் ஆய்வின் அடிப்படையில், இஸ்கந்தர் புத்ரி நகர் மன்றம் அந்த மையத்தை உடனடியாக மூட உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோகூர் மாநில அரசாங்கம், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாநில முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் தரமான முதலீடுகளை எப்போதும் வரவேற்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளையில், எந்த ஒரு முதலீட்டு நிறுவனமும், அமைப்பும் நாட்டின் சட்டத்திற்கும் இறையாண்மைக்கும் மேலானதாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நெட்வொர்க் ஸ்கூல், காயின்பேஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியும் முதலீட்டாளருமான பாலாஜி ஸ்ரீனிவாசன் என்பவரால் நிறுவப்பட்ட தனியார் குடியிருப்பு தொழில்நுட்ப சமூகம் என்பது குறிப்பிடத்தக்கது.








