கோலாலம்பூர், நவ. 18-
15 கோடி வெள்ளி சம்பந்தப்பட்ட ஃபெல்கிரா பெர்ஹாட் முதலீட்டில் 28 லட்சம் வெள்ளி ஊழல் புரிந்ததாக சபா மாநில பாரிசான் நேஷனல் தலைவரும், கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் மற்றும் அவரின் மனைவி டத்தின்ஸ்ரீ ஸிஸி இஸெட்டே அப்துல் சமாட் ஆகியோருக்கு எரான லஞ்ச ஊழல் வழக்கில் கணவனும், மனைவியும் தற்காப்பு வாதம் புரிய வேண்டும் என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
அவ்விருவருக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்கில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ அகமட் ஸை
யிடி இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு விசாரணை மீண்டும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்று நீதிபதி ஆணைப்பிறப்பித்தார்.
சபா அம்னோ தலைவருமான புங் மொக்தாரும், அவரின் மனைவி ஸிஸி இஸெட்டேடும் தங்களுக்கு எதிரான 28 லட்சம் வெள்ளி லஞ்ச ஊழல் வழக்கில் எதிர்வாதம் புரிய வேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டபம்ர் மாதம் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்ட வேளையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி உயர் நீதிமன்றம் இவ்விருவரையும் விடுதலை செய்தது.
உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை எதிர்த்து, பிராசிகியூஷன் தரப்பு செய்து கொண்ட மேல்முறையீட்டில் அப்பீல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
தங்களின் மேல்முறையீட்டில் உயர் நீதிமன்றத்தில் எதனை வாதமாக முன்வைத்தார்களோ, அதே வாதத்தை அப்பீல் நீதிமன்றத்திலும் அத்தம்பத்தியர் முன்வைத்திருப்பதாக நீதிபதி தமது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கணவனும் மனைவியும், குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனையும், லஞ்சம் வாங்கிய தொகையின் 5 மடங்கு தொகை அபராதமும் விதிக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.








