முன்னாள் நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்க்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு மாநில அரச விருதுகளை, நெகிரி செம்பிலான் மாநில அரண்மனை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநிலச் செயலாளர் டத்தோ முகமது சபிர் இப்ராஹிம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 2001-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தார்ஜா ஸ்ரீ உத்தாமா நெகிரி செம்பிலான் (எஸ்பிஎன்எஸ்) மற்றும் 1979-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தார்ஜா டத்தோ சேத்தியா நெகிரி செம்பிலான் (டிஎஸ்என்எஸ்) ஆகிய விருதுகள் திரும்பப் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசார் துங்கு முஹிரிஸ் துங்கு முனாவிர்-வின் உத்தரவின் படி, இந்த விருதுகள் இரத்து செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தின் கண்ணியம், பெருமை மற்றும் மரியாதையைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம், கடந்த 1978 முதல் 1982 வரை நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்-ஆகவும், கடந்த 2020 முதல் 2023-ஆம் ஆண்டு வரை நடாளுமன்ற அவைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








