சிரம்பான், நவ. 26-
சிரம்பான், தாமான் துவாங்கு ஜப்பாரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் ஆலயத்தில் அண்ணாமலையார் பாதம் மற்றும் அர்த்தனாதிஸ்வரர் பெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கான திருக்குட நன்னீராட்டு விழா மற்றும் ஆலய வருடாபிஷேக பெருவிழா நாளை நவம்பர் 27 ஆம் தேதி புதன்கிழமை காலை 10.04 மணி முதல் 11.04 மணி வரை வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.
திருவண்ணாமலை, மலையடி வாரத்தில் உள்ள ஆதி பெரிய நாயகி அம்பாள், இவ்வாலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, மலேசியாவில் திருவண்ணாமலை ஆதி பெரிய நாயகி அம்பாள் வீற்றிருக்கும் முதல் ஆலயமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவில் அதிகமான பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதின ஸ்ரீ கார்யம் வாமதேவ ஸ்ரீமத் சிவாக்ர தேசிக சுவாமிகளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்படி இக்குட முழக்கு பெருவிழா நடைபெறவிருக்கிறது.
இக்கும்பாபிஷேகத்தையொட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் பங்கு கொண்ட தெய்வசிலைகளுக்கு எண்ணெய் சாற்றுதல் வைபவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு, நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால வேள்வி வழிபாடு நடைபெற்றது. பின்னர் பேரொளி வழிபாட்டினை அடுத்து பிரசாதம் வழங்கப்பட்டது.

பக்தர்களின் ஆதரவுடனும், ஆலய நிர்வாகத்தினரின் பெரும் ஒத்துழைப்புடனும் நாளை புதன்கிழமை காலையில் நடைபெறவிருக்கும் இக்குட முழக்கு பெருவிழாவிலும், வருடாபிஷேக பெருவிழாவிலும், சிறப்பு பூஜைகளிலும் பக்த பெருமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








