கோலாலம்பூர், ஆகஸ்ட்.29-
மக்களவை அமர்வின் போது பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலர் சட்டைகளை அணிய வேண்டிய ஆடைக் கட்டுப்பாடு குறித்த கேள்வி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் மன்ற விதிகளின்படி பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசிய உடை, கை நீளம் அளவு கொண்ட ஆடை அல்லது முழங்கால் அளவிற்குக் குறையாத ஸ்கர்ட் அணிய வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் காலர் சட்டைகளை அணிய வேண்டிய கட்டாயம் குறித்து குறிப்பிடவில்லை என்று கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நோ சிங் கூறினார்.
மக்களவையில் விவாதிக்கக்கூடிய பல முக்கியமான விஷயங்கள் இருக்கும் போது, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடைகளைப் பற்றி ஒரு பிரச்னையாக சில ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் என தொடர்புத் துணையமைச்சருமான தியோ தெரிவித்தார்.
இது குறித்து பேசிய மக்களவை சபாநாயகர் டான் ஶ்ரீ டாக்டர் ஜொஹாரி அப்துல், இது போன்ற அவை நிலைக்குழு உத்தரவுக்கு முரணாக இல்லாத வரை, ஒரு பிரச்னையாக எழுப்பக்கூடாது என உத்தரவிட்டார்.
கடந்த திங்கட்கிழமை மக்களவையில், சட்ட உதவி மற்றும் பொது பாதுகாப்பு மசோதா 2025 முடிவுக்குக் கொண்டு வரும் சமயத்தில், உலு திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரோசோல் வாஹிட், பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்த்திருத்தம்) டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மானின் உடையை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








