கோலாலம்பூர், பிப்ரவரி.03-
கடந்த மாதம் இரண்டு பதின்ம வயதுச் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் 23 வயது சமூக ஊடகப் பிரபலம் முஹமட் இமான் ஹாஸிரிக் அஸிஸான் இன்று கோலாலம்பூரில் இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிபதிகள் தஸ்னிம் அபு பாக்கார் மற்றும் முஹமட் காஃப்லி சே அலி ஆகியோர் முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த சமூக பிரபலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
கடந்த ஜனவரி 22-ஆம் தேதி மதியம் 1 மணி முதல் இரவு 8 மணிக்குள், வங்சா மாஜுவில் உள்ள ஒரு காண்டோமினியம் வீட்டின் அறையில் 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக இமான் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அதே நாள், அதே இடத்தில் 16 வயது சிறுமிக்கு எதிராகப் பாலியல் நோக்கத்தில் அத்துமீறலில் ஈடுபட்டதாக இரண்டாவது குற்றச்சாட்டு அந்த நபர் மீது சுமத்தப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








