கெந்திங் மலைக்குச் செல்லும் சாலையில் மிகவும் ஆபத்தான முறையில் காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதோடு, வளைவுகளில் 'டிரிஃப்டிங்' (Drifting) செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஜைஹாம் கஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 2-ஆம் தேதி 'டிக் டாக்' சமூக வலைதளத்தில் வைரலான 14 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
"அந்த வீடியோவில் ஓட்டுநர், காரை மிக அசூர வேகத்தில் ஓட்டிச் சென்றதோடு, பல வளைவுகளில் ஆபத்தான முறையில் காரை 'டிரிஃப்டிங்' செய்துள்ளார். இது மற்ற சாலைப் பயனாளர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது," என்று அவர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பரவிய அந்த வீடியோவைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் 29 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தானாகவே முன்வந்து பெந்தோங் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் காரையும் அவர் கொண்டு வந்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதோடு, அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது என்று ஜைஹாம் கஹார் தெரிவித்தார்.








