சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸம்ரி வினோத், “சட்டவிரோத கோயில்கள்” தொடர்பான கூட்டம் குறித்து தமது முகநூலில் பதிவிட்ட கருத்துகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வருகின்றது.
தம் மீதான குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்யக் கோரி ஸம்ரி வினோத் தாக்கல் செய்த மனுவை சட்டத்துறை அலுவலகமான ஏஜிசி நிராகரித்துள்ளது.
இன்றைய வழக்கு மேலாண்மை விசாரணையின் போது, அரசு தரப்பு வழக்கறிஞர் நூர் ஃபார்ஹானா போவட், ஸம்ரியின் மனு நிராகரிக்கப்பட்டதாக நீதிபதி ஃபைஸாநூர் ஹசானிடம் தெரிவித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அதிகபட்சமாக 7 சாட்சிகளை அழைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைடுத்து, அடுத்த ஆண்டு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
41 வயதான ஸம்ரி வினோத், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி “சட்டவிரோத கோயில்கள்” தொடர்பான கூட்டம் குறித்து முகநூலில் பதிவிட்டதாக கடந்த மார்ச் 17-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 505(b)-இன் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே அச்சம் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அறிக்கை வெளியிடுவது தொடர்பான இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.








