தங்களது சொந்த கட்சியால் நீக்கப்பட்ட, எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்னோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அஷ்ரப் வஜ்டி டஸுக்கி தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், அம்னோ துணைத் தலைவர் காலிட் நோர்டின் தலைமையிலான சிறப்பு குழு, பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆனால், தற்போதைய சூழலில், கட்சி தாவல் தடுப்பு சட்டம் அமலில் இருப்பதால், அவர்கள் அம்னோவில் இணையும் பட்சத்தில், தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடுமோ? என்ற அச்சம் அவர்களிடம் இருப்பதாகவும் அஷ்ரப் வஜ்டி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், பல சட்டமன்ற உறுப்பினர்களும், அம்னோவில் இணைய ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கடந்த 2022 பொதுத் தேர்தலுக்கு பிறகு, தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரைக் கட்சியில் இருந்து நீக்கிய ஒரே கட்சி பெர்சாத்து என்பது குறிப்பிடத்தக்கது.








