Apr 9, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் உதயகுமாரை மோதித்தள்ளிய வேன் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மாணவன் உதயகுமாரை மோதித்தள்ளிய வேன் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

Share:

பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் ஒன்றாம் ஆண்டு மாணவன் 7 வயது உதயகுமார் வேன் மோதி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வேன் ஓட்டுநர் நேற்று புதன்கிழமை, செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

பத்துகேவ்ஸ், தாமான் லக்சமாணா பெர்மாய், ஜாலான் எல்.பி.2, டவுன் ஹவுஸ் பகுதியை சேர்ந்த எம். விஜயன் முருகேசன் என்று 50 வயதுடைய வேன் ஓட்டுநர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வேன் ஓட்டுநர் விஜயனுக்கு எதிராக 1987 ஆம் ஆண்டு சாலைபோக்குவரத்து சட்டத்தின் 43 பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 30-ஆம் தேதி, பத்துகேவ்ஸ் கம்போங் லக்சமணா, சாய் ஆனந்தா அறக்கட்டளை ஆசிரமத்தின் முன் நிகழ்ந்த இச்சம்பவத்தில், 50 வயது ஓட்டுநர் விஜயன் என்பவர் வேனிலிருந்து இறங்கிய மாணவன் மீது வாகனத்தை ஏற்றியதுடன், மீண்டும் பின்னோக்கி எடுத்து சிறுவனின் உடலில் சக்கரத்தை ஏற்றியதாக சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறும் பத்துகேவ்ஸ், ருமா பாஞ்சாங் பிங்கிரான் பகுதியை சேர்ந்த தந்தை ஸ்ரீதேவன் புகார் கூறியிருந்தார்.

சம்பவம் நிகழ்ந்து எட்டு நாட்கள் ஆகியும் சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாதது குறித்து மாணவன் உதயகுமார் பெற்றோரான ஸ்ரீதேவன் - ரதி தம்பதியர் கடந்த திங்கட்கிழமை கேள்வி எழுப்பியிருந்தனர்.

Related News