கோலாலம்பூர், மார்ச்.01-
மேற்காசியாவில் நிலவி வரும் தீவிரமான மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் மலேசியா தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்வதோடு, அப்பகுதியில் விரைவில் அமைதியும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானிய உச்சத் தலைவர் Ayatollah Ali Khamenei கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கும் இடையே நேரடித் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, ஈரானியப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்க ஆயுதப் படைத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதால் அங்கு போர்ச் சூழல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் பதற்றமான சூழ்நிலையால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், இவ்வட்டாரத்தில் மீண்டும் நிலைத்தன்மை ஏற்பட வேண்டும் என மலேசியா பிரார்த்திப்பதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.








