கூச்சிங், பிப்ரவரி.08-
செரியான் சாலையில் உள்ள ஒரு குடியிருப்பில் இன்று மாலை ஏற்பட்டத் தீ விபத்தில், ஒரு சிறுவன் உட்பட ஐந்து பேர் துரிதமாகச் செயல்பட்டு வீட்டிற்கு வெளியேறியதால் காயமின்றி உயிர் தப்பினர். பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கிய இந்தத் தீயினால் வீட்டின் சுமார் 60 விழுக்காடு பகுதிகள் சேதமடைந்தன. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பயன்படுத்தப்படாத ஒரு வேன் வாகனமும் தீயில் எரிந்து சாம்பலானது என சரவாக் மாநிலத் தீயணைப்பு – மீட்புப் படை தெரிவித்தது.
தகவலறிந்து வந்த சிபுரான், கோத்தா செந்தோசா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள், சில நிமிடங்களிலேயே தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து மற்ற இடங்களுக்குப் பரவாமல் தடுத்தனர். இந்த விபத்திற்கான துல்லியமான காரணமும் அதனால் ஏற்பட்ட இழப்பீட்டு மதிப்பீடு குறித்தும் தீயணைப்புத் துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








