வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் பாதையில்,193.8 ஆவது கிலோமீட்டரில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் தீயில் கருகி மாண்டார்.
டிரெய்லர் ஒன்று அவ்வாடவர் பயணித்த நான்கு சக்கர வாகனத்துடன் மோதியதில் தீ பரவி அத்துயரச் சம்பவம் ஏற்பட்டதாக மலாக்கா மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஹாபிசத்துல்லாஹ் ரஷீத் தெரிவித்தார்.
அவ்விபத்து குறித்து அதிகாலை 2.15 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து, ஆயர் குரோ மற்றும் ஜாசின் பெஸ்தாரி தீயணைப்பு நிலையங்களிலிருந்து இருபது தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள், நான்கு சக்கர வாகனத்திற்குள் ஒருவர் சிக்கியிருந்ததையும், மற்றொருவரான 54 வயது டிரெய்லர் ஓட்டுநர் பாதுகாப்பாகத் தப்பியிருந்ததையும் கண்டதாக ஹாபிசத்துல்லாஹ் கூறினார்.
தீயில் கருகி பலியான ஆடவரின் சடலம் மீட்கப்பட்டு பின்னர் மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.








