சபா மாநிலம், பப்பாரில் உள்ள பள்ளியொன்றில் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்த இரண்டாம் படிவ மாணவி, தற்போது நலமுடனும், சீரான உடல்நிலையுடனும் இருப்பதாக சபா கல்வித் துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் நடந்தவுடன் பள்ளி நிர்வாகம் உடனடி முதலுதவி அளித்து, மாணவியின் குடும்பத்தினருக்கும் போலீஸ்க்கும் தகவல் தெரிவித்ததாக அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவப் பரிசோதனையில் மாணவிக்குக் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் குற்றச் செயல்கள் அல்லது பகடி வதை போன்ற குறிகள் ஏதும் இல்லை என்று பள்ளி நிர்வாகத்தின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாணவிக்குத் தேவையான மனநல ஆலோசனைகளும், ஆதரவும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை வேதனைப்படுத்த வேண்டாம் என்று பப்பார் மாவட்ட போலீஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.








