ஜோகூர் பாரு, மார்ச்.29-
தற்போதைய உலகளாவிய மோதல்களால் சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைக் கண்டறியவும், அவற்றுக்கான தீர்வுகளை ஆராயவும் அரசாங்கம் நாளை தொழில் துறை சார்ந்தவர்களுடன் முக்கியச் சந்திப்பை நடத்தவுள்ளது. இச்சந்திப்பில் பெறப்படும் கருத்துக்கள் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் புதன்கிழமை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்படும் என்று பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசிர் தெரிவித்தார். எரிபொருள் விநியோகத் தட்டுப்பாடுக்கும், புவிசார் அரசியல் சிக்கல்களுக்கும் மத்தியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 4 முதல் 4.5 விழுக்காடு வரை தக்க வைப்பதையும் மக்களின் நலனைப் பாதுகாப்பதையுமே அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் கூறினார்.








