இந்தோனேசியாவின் வட மாலுக்கா கடற்பரப்பில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தெர்னேட் தீவு அருகே இன்று அதிகாலை, 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அமெரிக்கப் புவியியல் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கத்துக்குப் பின்னர் 5 ரிக்டர் வரையில் பல அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
மேலும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பின்னர், சில மணி நேரங்களில் அந்த எச்சரிக்கையானது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, மேற்கு ஹல்மஹேரா பகுதியில் 0.3 மீட்டர் உயரத்திலும், பிதுங் பகுதியில் 0.2 மீட்டர் உயரத்திலும் சிறிய அளவிலான சுனாமி அலைகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், மனாடோ பகுதியில் கட்டிடங்கள் சரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் இந்தோனேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.








