தாய்லாந்தின் சோங்லா மாநிலம், நான்' மொம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைந்து இருந்த 80-க்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மலேசியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையத் திட்டமிட்டு இருந்ததாக சந்தேகிக்கப்படும் அக்குழுவில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று மதியம் சுமார் 1 மணியளவில், காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான அசைவுகளை கவனித்த கிராம மக்கள், போலீசாருக்குத் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களைக் கண்டுபிடித்தனர்.
மலேசியாவில் வேலை பெறும் நம்பிக்கையில், ஒவ்வொருவரும் 79 ஆயிரம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் baht வரையில், மலேசிய மதிப்பில் 10 ஆயிரம் முதல் 20,000 மலேசிய ரிங்கிட் வரை முகவர்களுக்கு பணம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.








