கோலாலம்பூர், ஜூலை.11-
கோலாலம்பூர் 2031 ஆம் ஆண்டுக்குள் 2.08 மில்லியன் மக்கள் தொகையுடன் உச்ச நிலையை அடையும் என மலேசிய புள்ளி விவரத்துறை கணித்துள்ளது. மலேசியாவில் வெளியிடப்பட்ட 'மக்கள் தொகை கணிப்பு 2030-2060' புத்தகத்தின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கோலாலம்பூரைத் தொடர்ந்து பினாங்கு 2040-லும், சிலாங்கூர் 2049-லும் உச்ச மக்கள் தொகையை அடையும் என்று தலைமைப் புள்ளி விவர வல்லுநர் டத்தோ ஶ்ரீ டாக்டர் முகமட் உஸிர் மஹிடின் தெரிவித்தார். சமூக-பொருளாதார நிலைமைகள், வட்டார வளர்ச்சி, இளைஞர்களின் தாமதமான திருமணங்கள், சிறிய குடும்ப அலகுகள் போன்ற காரணிகள் இந்தக் கணிப்பைப் பாதிக்கின்றன என்றார்.
நாட்டின் மற்ற மாநிலங்களான கிளாந்தான், திரங்கானு, சபா போன்றவை 2059 க்குப் பிறகே உச்ச நிலை மக்கள் தொகையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








