போதைப்பொருளை கடத்துவதற்கு விரைவு பேருந்துகளை பயன்படுத்தும் கும்பல் ஒன்றை போலீசார் முறியடித்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி தெரிவித்துள்ளார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் கோலாலம்பூரில் ஓர் எண்ணெய் நிலையம் அருகில் 32 க்கும் 54 க்கும் இடைப்பட்ட வயதுடைய நான்கு ஆடவர்கள் கைது செய்யப்பட்டது மூலம் பெரியளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இன்று ஷா ஆலமில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ சசிகலாதேவி குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 11.55 மணியளவில் சிலாங்கூர் மாநில போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு போலீசார்,நிஸ்ஸான் அல்மேரா ரக கார் ஒன்றை தடுத்து நிறுத்தி, 10.4 கிலோ எடை கொண்ட போதைப்பொருளை கைப்பற்றியது.
பின்னர் அந்த காரோட்டி கொடுத்த தகவலைத் தொடர்ந்து விரைவு பேருந்து ஒன்று வழிமறிக்கப்பட்டு, பயணிகளின் உடமைகளை வைக்கும் கீழ் தளத்திலிருந்து 3 லட்சத்து 58 ஆயிரத்து 899 வெள்ளி பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








