பானாசோனிக் நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்படுவதால் பாதிக்கப்படும் 541 ஊழியர்களுக்கு உரிய ஆதரவு வழங்கப்படும் என மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வேலை இழப்பால் ஏற்படும் இடைக்கால நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும், இந்த காலகட்டத்தில் அவர்கள் கைவிடப்படமாட்டார்கள் என்றும் டத்தோ ஸ்ரீ ரமணன் கூறினார்.
சமூகப் பாதுகாப்பு நிறுவனமான பெர்க்கேசோ மூலம், வேலைவாய்ப்பு காப்புறுதித் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு வருமானப் பாதுகாப்பு வழங்குவதுடன், புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான தொழில் ஆலோசனை மற்றும் வேலைவாய்ப்பு பொருத்துதல் சேவைகளும் வழங்கப்படும் என்றார்.
மேலும், ஊழியர்களின் தேவைக்கேற்ப மறுதிறன் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
“வேலை இழப்பிலிருந்து புதிய வேலைவாய்ப்பை நோக்கி” என்ற அணுகுமுறையின் மூலம், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு சந்தையில் இணைய மனித வள அமைச்சு மற்றும் பெர்க்கேசோ தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும் டத்தோ ஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.








