புத்ராஜெயா, மே.13-
வாசிப்பு என்பது வெறும் ஓய்வு நேரச் செயல்பாடு மட்டும் அல்ல, மனதைக் கூர்மைப்படுத்தவும், பச்சாதாபத்தை வளர்க்கவும், விமர்சன சிந்தனையைப் பயிற்றுவிக்கவும் ஒரு சிறந்த வழியாகும் என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ ச்சிங் தெரிவித்துள்ளார்.
வாசிக்கும் பழக்கமுடைய சமூகமே அறிவுள்ள சமூகமாக உயர முடியும். இத்தகைய அறிவைப் பெறும் சமூகம் பிரச்னைகள் குறித்து தெளிவான சிந்தனையையும், விழிப்புணர்வையும் பெற முடியும்.
பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கிய நம் நாட்டில் வாசிக்கும் சமூகத்தை கட்டியெழுப்பும் ஒரு மையமாக திகழ வேண்டும்.
குறிப்பாக மற்றவர்களின் கலாச்சாரம், மரபுகள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி படிப்பது, பன்முகத்தன்மையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளவும், பரஸ்பர மரியாதையை வளர்க்கவும் உதவும் என்று துணை அமைச்சர் தியோ நீ ச்சிங் தெரிவித்தார்.
இன்று புத்ராஜெயாவில் தொடர்புதுறை அமைச்சு அளவிலான 2025 ஆம் ஆண்டுக்கான ஒன்றாக வாசிப்போம் திட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் தியோ நீ ச்சிங் மேற்கண்டவாறு கூறினார்.
படிப்பதன் மூலமே நாம் ஒரு வலுவான தேசிய அடையாளத்தை வடிவமைக்க முடியும் என்பதுடன் பல்வேறு சமூகங்களுக்கு இடையே பரஸ்பர மரியாதையை வளர்க்க முடியும் என்று தியோ நீ ச்சிங் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் 2025 ஆம் ஆண்டின் புத்தக மதிப்பாய்வு வீடியோ போட்டியின் தொடக்கம், 6 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் வருகையால் உற்சாகப்படுத்தப்பட்டது.








