வாழ்க்கைச் செலவின உயர்வு மற்றும் எரிபொருள் மானியச் சுமையைக் குறைக்கும் நோக்கில், தனியார் நிறுவனங்கள் 'வீட்டிலிருந்தே பணிபுரியும்' அல்லது 'ஹைபிரிட்' முறையை அமல்படுத்த வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்ற 'வெற்றி மடானி' திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ ரமணன், பெட்ரோல் மானியச் செலவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மாதம் 4 பில்லியன் ரிங்கிட்டைத் தொட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தச் சூழலில், ஊழியர்களின் பயணச் செலவைக் குறைக்கவும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும் இத்தகைய பணி முறைகள் அவசியம் என்றார்.
வங்கிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே இம்முறையைப் பின்பற்றுவதைச் சுட்டிக்காட்டிய அவர், மற்ற தனியார் நிறுவனங்களும் இதைச் செயல்படுத்த முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இம்முறையை அமல்படுத்தும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.








