DAP - யின் பழம்பெரும் அரசியல்வாதியும், புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் Kor Ming - கின் சகோதரருமான ஙெ கூ ஹாம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பேரா, Manjung, அருகில் ஆயெர் தாவார் தாமான் செமாராக் ஜெயா வில் உள்ள ஙெ கூ ஹாம் வீட்டில் இன்று புதன்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பேரா மாநில டிஏபி ஆலோசகருமான ஙெ கூ ஹாம் மற்றும் அவரின் மனைவி உயிர்தப்பியுள்ளனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு, வீட்டின் வாசல்படியில் நாலாபுறமும் சூழ்ந்து விட்டதால் ஙெ கூ ஹாம் - மிற்கு சொந்தமான Mercedes E300 ரக கார் முற்றாக அழிந்ததுடன், Honda CRV மற்றும் Toyota Hilux ஆகிய இரு வாகனங்கள் சேதமுற்றன.
அதிகாலை 2.50 மணியளவில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது போன்ற வன்செயல் தாக்குதல்கள் அறவே ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்தோணி லோக் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து அதிகாலையில் ஙெ கூ ஹாம், தம்மிடம் தெரிவித்தாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டக்கூடிய வேற்றுமைகளை கையாளுவதற்கு இது போன்ற வன்முறைகளை கையில் எடுப்பது நமது கலாச்சாரம் அல்ல என்று அந்தோணி லோக் தெவித்தார்.
ஙெ கூ ஹாம் இல்லத்தில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்திற்காக நாடு முழுவதும் உள்ள DAP உறுப்பினர்கள் சார்பில் தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில் இவ்விவகாரத்தில் ஙெ கூ ஹாம் க்கு ஆதரவாக DAP இருக்கும் என்று அந்தோணி லோக் அறிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் ஙெ கூ ஹாம், போலீசில் புகார் செய்துள்ளார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு பொறுப்பான தரப்பினர் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் கேட்டுக்கொண்டார்.
பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட போது ஙெ கூ ஹாம் மும், அவரின் மனைவியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். அண்டை வீட்டுக்காரர்கள் ஙெ கூ ஹாம் மின் வீட்டின் அலாறமணியை அடித்து அவரையும், அவரின் மனைவியும் தூக்கத்திலிருந்து விழிப்படைய செய்துள்ளனர். அதன் பின்னரே கணவரும், மனைவியும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
தகவல் கிடைத்து ஙெ கூ ஹாம் மின் இல்லத்திற்கு விரைந்த ஆயர் தாவார் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த ஏழு வீரர்கள் முழு வீச்சில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 3.05 மணியளவில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
அண்மையில் ஷரியா நீதிமன்ற சிறப்பு நடவடிக்கைக்குழுவில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம் பெற வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்தை ஙெ கூ ஹாம்வெளியிட்டதைத் தொடர்ந்து அம்னோ, எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரின் குறைகூறல்களுக்கும், கண்டனத்திற்கும் அந்த DAP தலைவர் ஆளானர்.
எனினும் சர்ச்சைக்குரிய அந்த அறிக்கையை வெளியிட்டதற்காக ஙெ கூ ஹாம்பின்னர் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன் அந்த அறிக்கையை மீட்டுக்கொண்டார்.








